சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனை
சிங்கப்பூரில், மியன்மார் பணிப்பெண்ணை 14 மாதக் காலத்திற்குத் துன்புறுத்தி, கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், 41 வயது காயத்திரி முருகையன், நோக்கமில்லாக் கொலை, பட்டினிபோட்டு வேண்டுமென்றே காயப்படுத்தியது, சூடான பொருள் கொண்டு வேண்டுமென்றே காயப்படுத்தியது உள்ளிட்ட 28 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
2016-ஆம் ஆண்டு, ஜூலை 26-ஆம் திகதி மியன்மாரைச் சேர்ந்த 24 வயது பணிப்பெண் பியாங் நகெய் டோன் (Piang Ngaih Don) காயத்திரியாலும் காயத்திரியின் தாயாராலும் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
2015-ஆம் ஆண்டு, மே 28-ஆம் திகதி மாதம் காயத்திரியிடம் வேலை செய்ய பியாங் சிங்கப்பூர் வந்தார். அன்று முதல் 14 மாதங்களாக ஒவ்வொரு நாளும் துன்புறுத்தப்பட்டுள்ளார். அவர் இறந்த அப்போது அவருடைய உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்துள்ளது.
கடைசி சில வாரங்கள் அவர் துன்புறுத்தப்பட்ட காட்சிகள், காயத்திரியன் கணவர் கெவின் செல்வம் தனது வீட்டில் பொருத்திய கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்தது.
காயத்திரி தனது பணிப்பெண் மீது குளிர்ந்த நீரை ஊற்றுவதும், அறைந்து, தள்ளுவதும், குத்துவதும், உதைப்பதும், அடிப்பதும் காட்சிகளாக பதிவாகியிருந்தது.
அவர் பியாங்கின் தலைமுடியை இழுத்து, சூடான இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளார்.
அவருக்கு உணவாக பெரும்பாலும் தண்ணீரில் நனைத்த ரொட்டி துண்டுகள், குளிர்சாதன பெட்டியிலிருந்த பச்சையான குளிர்ந்த உணவு மற்றும் இரவில் சிறிது சோறு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
கழிப்பறையில் கதவு திறந்த நிலையில் குளிக்க வைத்துள்ளனர். பியாங் தனது வாழ்க்கையின் கடைசி 12 நாட்கள் தரையில் தூங்கும்போது இரவில் ஜன்னல் கம்பியில் கட்டப்பட்டிருந்தார்.
காவல்துறை அதிகாரியான கெவின் செல்வம் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் திகதி பணிநீக்கம் செய்யப்பட்டார். மனைவி காயத்திரியை கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் திகதி விவாகரத்து செய்தார்.
காயத்திரிக்கு தண்டனை விதிக்கப்படுவதில், அவரது மனநலப் பிரச்சினைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனநலச் சிகிச்சையால் அவரிடம் நல்ல மாற்றம் தென்படுவதாலும், அவரால் பொதுமக்களுக்கு ஆபத்தோ குற்றம் புரியும் அபாயமோ இல்லை என்பதாலும் ஆயுள் தண்டனை பொருத்தமற்றது என்று நீதிபதி கூறினார்.
காயத்திரியின் கணவர் கெவின் செல்வம் (42), மற்றும் காயத்திரியின் தாயார் பிரேமா நாராயணசாமி (62) ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களது வழக்கு நிலுவையில் உள்ளது.