ஐந்து பேருக்கு மேல் சாலையில் சென்றால் அபராதம்! பிரபல நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறை
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சைக்கிள் ஓட்டுவதற்கு புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூரில் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் தேதியிலிருந்து சாலையில் குழுவாக சைக்கிள் ஓட்டுவோர், அதிகபட்சமாக 5 பேர் கொண்ட வரிசைகளில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
ஒரே வரிசையில் 5 பேர் செல்லலாம். இரண்டு வரிசைகளாக இருந்தால் 10 பேர் வரை, 5 பேர் கொண்ட வரிசைகளில் செல்லலாம்.
சிங்கப்பூரின் சாலைக் கட்டமைப்பில் போதிய இடம் இல்லாததால் அத்தகைய கட்டுப்பாடுகளைப் போக்குவரத்து அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.
இந்த விதிகளை மீறுவோருக்கு 150 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தடங்கள் உள்ள சாலைகளில் சைக்கிளோட்டிகள் தொடர்ந்து இரு வரிசைகளில் செல்லலாம்.
ஆனால் ஒரே தடம் உள்ள சாலைகளிலோ, பேருந்துக்கான தடங்கள் செயல்படும் நேரங்களிலோ, சைக்கிளோட்டிகள் அவ்வாறு செய்யமுடியாது. அப்போது அவர்கள் ஒரு வரிசையில் மட்டுமே ஐந்து பேர் கொண்ட குழுவாக செல்லலாம்.
இந்த புதிய விதிகளை Active Mobility Advisory Panel எனும் குழு, 6 மாத மறுஆய்வுக்குப் பின் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் கிருமிப்பரவல் சூழலில் அதிகமானோர் சைக்கிள் ஓட்டுகின்றனர். அதேவேளையில் அண்மைக் காலத்தில் அதிகமான சைக்கிள் விபத்துகளும் நடக்கின்றன. இதனால் விபத்துகளைத் தவிர்க்கப் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.