சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்., 79% செயல்திறன் கொண்டதாம்!
சீனாவின் சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரித்தானியா, இந்தியா, அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்ததை அடுத்து, அவை உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சீனாவின் தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசியின் ஆய்வு தொடர்பான காரணங்களால் அதற்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. இதனால் சினோஃபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த உலக நாடுகள் தயக்கம் காட்டின.
இந்த நிலையில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
சீனாவின் இந்த தடுப்பூசி கொரோனா தொற்றினை தடுப்பதில் 79% செயல்திறன் மிக்கது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலை பெற்ற 6-வது தடுப்பூசி சினோஃபார்ம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஃபைசர்-பயோஎன்டெக், ஜான்சன் & ஜான்சன், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு ஆகிய 5 கொரோனா தடுப்பூசி மருந்துகளை WHO அங்கீகரித்துள்ளது.