துபாய் லொட்டரியில் சிவகாசி தமிழருக்கு அடித்த ஜாக்பாட்! கனவு நிறைவேறப்போவதாக மகிழ்ச்சி
தமிழகத்தின் சிவகாசியைச் சேர்ந்த நபர் ஒருவர் துபாய் லொட்டரில் 10 லட்சம் திர்ஹாம் வென்றார்.
சிவகாசி நபர்
துபாயில் கணக்காளராக பணியாற்றி வரும் ஆனந்த் பெருமாள்சாமி (33), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமீரகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லொட்டரியை வாங்க முடிவு செய்தார். ஆனால் அதன் விலை அதிகம் என்பதால் ஒரு குழுவாக சேர்ந்து வாங்க ஆனந்த் திட்டமிட்டார்.
அதன்படி தனது நண்பருடன் சேர்ந்து 12 பேர் கொண்ட குழுவை ஒன்றிணைத்து, மாதத்திற்கு 2 லொட்டரி டிக்கெட்டுகளை குழுவாக சேர்ந்து வாங்கியுள்ளார்.
அதன் பின்னர் அந்த குழுவானது, 15 நாட்களுக்கு ஒருமுறை லொட்டரி டிக்கெட் குலுக்கலை நேரலையில் பார்த்து வந்துள்ளது.
இந்த நிலையில் உறங்குவதற்கு முன் செயலியைப் பார்த்த ஆனந்த், தனது லொட்டரிக்கு 10 லட்சம் திர்ஹாம் பரிசு விழுந்திருப்பதை அறிந்து இன்ப அதிர்ச்சியடைந்தார். இது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 32 லட்சம் ரூபாய் ஆகும்.
தலா ரூ.20 லட்சம்
இதுகுறித்து ஆனந்த் பெருமாள்சாமி கூறுகையில், "துபாயில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். தற்போது அதிர்ஷ்ட லொட்டரி குலுக்கலில் வெற்றிபெற்ற இரவும், அதற்கு அடுத்த நாளும் எனக்கு தூக்கம் வரவில்லை.
எனது நண்பர்களிடம் இதனை தெரிவித்தபோது நகைச்சுவைக்காக சொல்வதாக நினைத்தனர். பரிசுத்தொகை குழுவில் உள்ள 12 பேர் பிரித்துக்கொள்ள இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20 லட்சம் வரை கிடைக்கும்.
அடுத்த மாதம் நான் திருமணம் செய்துகொள்ள உள்ளேன். எனது பங்கினை திருமணத்திற்கு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். அமீரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளேன். இங்கு கார் ஓட்ட வேண்டும் என்பது எனது கனவு. இப்போது அது நனவாகும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |