நள்ளிரவில் 14 அடி உயர சுவர் மேலிருந்து அமெரிக்காவிற்குள் போடப்பட்ட குழந்தைகள்: ஒரு திடுக் வீடியோ
நள்ளிரவில், கும்மிருட்டில், மெக்சிகோ எல்லையில் அமைந்துள்ள 14 அடி உயர சுவர் மேலிருந்து இரண்டு குழந்தைகள் அமெரிக்காவிற்குள் போடப்படும் திடுக்கிடவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாயன்று இரவு, அமெரிக்க எல்லையை கமெரா மூலம் கண்காணிக்கும் அலுவலகத்திலிருந்த ஒருவர், குழந்தைகள் இருவர் 14 அடி உயர சுவர் மேலிருந்து அமெரிக்காவிற்குள் போடப்படும் காட்சியைக் கண்டு உடனே அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ளார்.
உடனடியாக அங்கு விரைந்த அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், அந்த சிறுமிகள் இருவரையும் மீட்டு, அவர்களுக்கு முதலுதவி செய்து, பின் அவர்களுக்கு வேறேதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதா என அறிவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
முறையே, மூன்று மற்றும் ஐந்து வயதுடைய அந்த ஈக்வடார் நாட்டுச் சிறுமிகள் இருவரையும் அமெரிக்க எல்லைக்குள் போட்டுவிட்டு, கடத்தல்காரர்கள் இருவர் தப்பி ஓடும் காட்சிகளை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.
தற்போது, அதிகாரிகள் அந்த குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால், அவர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதியாகியுள்ளது.
அந்த கமெரா காட்சிகளை கண்காணிக்கும் அலுவலர் அந்த குழந்தைகளை கவனிக்காமலிருந்திருந்தால், அவர்கள் உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.
அந்த குழந்தையின் பெற்றோர் எப்படி தனியாக அந்த குழந்தைகளை விட சம்மதித்தார்கள் என்று தெரியவில்லை.
இதற்கிடையில், வீடியோ காட்சிகளின் அடிப்படையில், அந்த குழந்தைகளை எல்லைக்குள் போட்டு விட்டு ஓடியவர்களை தேட, மெக்சிகோ அரசின் உதவியுடன் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

