டி20 உலகக்கிண்ணம் தொடர்.. உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார் கங்குலி
டி20 உலகக்கிண்ணம் தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் 2020 தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிசிசிஐ-க்கு டி20 உலகக்கிண்ணம் தொடரை நடத்தும் வாய்ப்பை வழங்கியது ஐசிசி அமைப்பு இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கிண்ணம் தொடர் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் தொடரை இந்தியாவில் நடத்த பல நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து பிசிசிஐ பதிலளிக்க ஜூன் 27ம் திகதி வரை கால அவகாசம் கொடுத்தது ஐசிசி.
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது முடிவை அறிவித்துள்ளார். அதில், டி20 உலகக்கிண்ணம் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்திருப்பதாக உத்தியோகப்பூர்வமாக ஐசிசி-யிடம் பதிலளித்துவிட்டோம் எனக்கூறியுள்ளார்.
இதனால் ஐபிஎல் தொடருடன் சேர்ந்து டி20 உலகக்கிண்ணம் தொடரும் அமீரகத்தில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதனிடையே டி20 உலகக்கிண்ணம் தொடர் நடைபெறும் திகதிகள் குறித்து தகவல்கள் கசிந்துள்ளது.
அக்டோபர் 17ம் திகதி தொடங்கி நவம்பர் 14ம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ம் திகதி முதல் அக்டோபர் 15ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் முடிந்த இரண்டே நாட்களில் டி20 உலகக்கிண்ணம் தொடர் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. டி20 உலகக்கிண்ணம் தொடர் 2 நாடுகளில் நடத்தப்படவுள்ளது.
தகுதிச்சுற்று ஆட்டங்கள் அனைத்தும் ஓமனில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் திகதி முதல் அக்டோபர் 24ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன் பிறகு சூப்பர் 12 பிரிவு ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்காக அங்குள்ள 3 மைதானங்களும் தயார் படுத்தப்படவுள்ளன.