ஆபத்தான ஓமிக்ரான் தொற்று ஐரோப்பாவில் தான் முதலில் கண்டறியப்பட்டதா? வெளிவரும் புதிய தகவல்
உலக நாடுகளை மீண்டும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ள ஓமிக்ரான் தொற்றானது முதன்முதலில் ஆபிரிக்க நாடான பொஸ்வானாவில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐரோப்பிய நாடு ஒன்றின் மீது கவனம் திரும்பியுள்ளது.
ஆபிரிக்க நாடான பொஸ்வானாவில் பெண் மருத்துவர் ஒருவர் புதிய ஓமிக்ரான் தொற்று தொடர்பில் அங்குள்ள சுகாதாரத்துறையை எச்சரித்தார். நவம்பர் 24ம் திகதி குறித்த தகவல் உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, சர்வதேச நாடுகள் பல 8 தெற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு நேரடி விமான சேவையை தடை செய்துள்ளதுடன், பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
ஆனால் தற்போது முக்கிய திருப்பமாக, ஓமிக்ரான் தொற்றானது நவம்பர் 19ம் திகதியே ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் கண்டறியப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை நெதர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகளே வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்றின் மாதிரிகளில் புதிய மாறுதல்களை காண நேர்ந்ததை அடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில், ஓமிக்ரான் மாறுபாடு தொடர்பில் தென்னாபிரிக்காவே முதன்முதலில் தங்களிடம் தகவல் தெரிவித்ததாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதாவது புதிய மாறுபாடானது அது உருவானதை யாரும் அறிவதற்கு முன்னரே உலகம் முழுவதும் பரவியுள்ளது என்பது இதில் உறுதியாகியுள்ளது.
இருப்பினும், தெற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து திரும்பியவர்களால் நெதர்லாந்தில் தொற்று கண்டறியப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. உலக நாடுகள் நேரடி விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளதை ஏற்கனவே தென்னாபிரிக்கா விமர்சனம் செய்துள்ளது.
தங்களை தண்டிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.
2019ல் கொரோனா பரவல் தொடர்பிலும் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. சீனா தங்கள் நாட்டில் கொரோனா பரவல் இருப்பதை உறுதி செய்யும் முன்னரே, இத்தாலியில் கொரோனா மாதிரிகள் கண்டறியப்பட்டதும், பின்னர் அதை விவாதிக்கப்படாமல் மூடிமறைத்ததும் பன்னாட்டு அரசியலின் ஒருபகுதியாகவே பார்க்கப்படுகிறது.