ஓமிக்ரான் அச்சுறுத்தல் ஒருபக்கம்... தென் ஆபிரிக்காவை புரட்டிப்போடும் நான்காவது அலை
தென் ஆபிரிக்காவில் ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா தொற்றின் நான்காவது அலையால் ஒரே நாளில் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது.
உலக நாடுகளை கடும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது, உருமாறியுள்ள புதிய கொரோனா. இஸ்ரேஎல், ஜப்பான் நாடுகள் சர்வதேச எல்லைகளை மூடியுள்ள நிலையில், பல முக்கிய நாடுகள் நேரடி விமான சேவைகளை தடை செய்துள்ளது.
ஓமிக்ரான் தொற்றானது ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களையும் எளிதில் தாக்கும் என்பதால் மக்கள் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் அச்சம் ஒருபக்கம் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், தென் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
அங்கு கொரோனா பாதிப்பு 4,373 என்று இருந்த நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் 8,561 ஆக அதிகரித்துள்ளது. நவம்பர் மாத தொடக்கத்தில், 7 நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 200 என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, மாத மத்தியில் புதிய கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது.
வரும் மாதங்களில் ஓமிக்ரான் பாதிப்பு இரண்டு அல்லது மும்மடங்காக இருப்பதைப் பார்க்கப் போகிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் மண்டல மருத்துவ நிபுணர் நிக்ஸி குமேட்-மொலெட்ஸி எச்சரித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவில் ஏற்கனவே 90,000 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.