12- 17 வயதினருக்கு அடுத்த வாரம் முதல் பைசர் தடுப்பூசி: அறிவித்த நாடு
தென்னாபிரிக்காவில் 12 - 17 வயதினருக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், தென்னாபிரிக்க சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டின் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த அரசு முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக இலக்கை எட்டும் வகையில் தென்னாபிரிக்காவில் 12 -17 வயதினருக்கு அடுத்த வாரம் முதல் பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே 12 -17 வயதினருக்குச் செலுத்தப்படுகிறது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரண்டாவது டோஸ் அவர்களுக்கு தற்போது செலுத்தப் போவதில்லை என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும், மண்டலங்களிலும் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதேவேளை, பல நாடுகள் புதிதாக கொரோனா அலைகளையும், இறப்பையும் எதிர்கொண்டு வருகின்றன.
மேலும், குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் கொண்ட நாடுகளில் கொரோனாவால் இறப்பு அதிகமாக காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.