வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை அமெரிக்காவுடன் இணைந்து தடுப்போம்! புதிய ஜனாதிபதி தடாலடி
தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியான லீ ஜே மியூங், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திடீர் தேர்தலில் வெற்றி
கடந்த ஆண்டு இறுதியில் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இராணுவ சட்டத்தை விதித்ததால் பெரும் பதற்றம் உருவாகி, பின்னர் அவர் ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் தூண்டப்பட்ட திடீர் தேர்தலில் லீ ஜே மியூங் (Lee Jae-Myung) வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய சட்டமன்றத்தில் தனது தொடக்க உரையில் பேசிய லீ, "தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்ட நடைமுறை ரீதியான இராஜதந்திரத்தின் மூலம், உலகளாவிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலப்பரப்புகளில் ஏற்பட்ட பாரிய மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடியை நமது தேசிய நலன்களை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக மாற்றுவோம்" என தெரிவித்தார்.
மேலும் அவர், "வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களையும், அதன் சாத்தியமான இராணுவ ஆக்கிரமிப்புகளையும் எங்கள் அரசாங்கம், அமெரிக்க இராணுவ கூட்டணியின் அடிப்படையில் வலுவான தடுப்பு மூலம் கையாளும்" என்றார்.
அமைதியை நிலைநாட்டுவோம்
ஆனால், வடகொரியாவுடன் ஒரு தொடர்பு வழியைத் திறந்து, பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பு மூலம் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவோம் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் அண்டை நாடுகளுடன் நடைமுறை ரீதியான இராஜதந்திரத்தைப் பின்பற்றுவதாகவும், வலுவான தென் கொரிய - அமெரிக்க கூட்டணியின் அடிப்படையில் சியோல்-வாஷிங்டன் - டோக்கியோ முத்தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |