ஐரோப்பாவில் முதல் பலி பதிவானது... ஆப்பிரிக்காவுக்கு வெளியே இது இரண்டாவது
கொரோனாவுக்கு பிறகு உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ள குரங்கம்மை தொற்றுக்கு ஸ்பெயின் நாட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளது, ஐரோப்பாவில் முதல் பலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவந்த குரங்கம்மை தொற்றானது, அந்த நாடுகளுக்கு வெளியே தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் மட்டும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் குரங்கம்மை தொற்றுக்கு ஐவர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை வெளியான தகவலில் ஆப்பிரிக்காவுக்கு வெளியே பிரேசில் நாட்டில் குரங்கம்மை தொற்றுக்கு முதல் பலி பதிவானது. கடந்த சனிக்கிழமை தான், குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு சுகாதார அவசரநிலையை பிரகடனம் செய்திருந்தது உலக சுகாதார அமைப்பு.
75 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மொத்தம் 16,000 பேர்களுக்கு குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, நாட்டில் 4,298 பேர்களுக்கு குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 120 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவில் குரங்கம்மை தொற்றுக்கு பலியாகும் முதல் நபர் இவரென குறிப்பிட்டுள்ள நிலையில், மேலதிக தகவல்களை வெளியிடவும் ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது.
பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் குரங்கம்மை தொற்றானது வேகமெடுத்துவருவதால் பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குரங்குகளில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த தொற்றானது, தற்போது மனிதர்களில் வேகமாக பரவி வருகிறது.
தொற்று பாதிக்கப்பட்டால் 6-ல் இருந்து 13 நாட்களுக்கு பின்னர் அறிகுறிகள் தென்படும் எனவும் 5-ல் இருந்து 21 நாட்கள் வரையில் நீடிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உடல் தொடர்பினால் இன்னொருவருக்கு வேகமாக பரவும் எனவும், பாதிக்கப்பட்டவர்களை தொடுவதாலும், அவர்கள் பயன்படுத்திய உடைகளை உடுத்துவதாலும், அவர்கள் பயன்படுத்திய படுக்கையில் படுப்பதாலும் குரங்கம்மை தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் இருமல், தும்மல் உள்ளிட்டவையால் குரங்கம்மை பரவும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கூறுகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுடன் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபடுவதால் ஆபத்து அதிகம் எனவும், இருப்பினும், அதனால் குரங்கம்மை தொற்று பரவுகிறதா என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
இதுவரை குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் இருபால் ஈர்ப்பாளர்கள் என்றே கண்டறியப்பட்டுள்ளது.
ஜூலை 21ம் திகதி வரையான தகவலில், பிரித்தானியாவில் 2,208 பேர்களுக்கு குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானோர் லண்டன்வாசிகள் என்றே தெரியவந்துள்ளது.