புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை கடும் சிக்கலில் முடியும்: ஐரோப்பிய நாடொன்றிற்கு எச்சரிக்கை
500,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்க ஸ்பெயின் திட்டமிட்டுள்ளதற்கு, வலதுசாரி எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒரு வருடம் வரை
ஸ்பெயின் அரசாங்கத்தின் இந்த முடிவு ஊடுருவலைத் தீவிரப்படுத்தும் எனவும், வீட்டுவசதி நெருக்கடியை மோசமாக்கும் என்றும் பொது சேவைகளைச் சீர்குலைக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.

ஸ்பெயின் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிகழ்ந்து வரும் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளது.
மட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த முன்முயற்சியானது அரச ஆணை மூலம் அங்கீகரிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் இந்த கொள்கை, தகுதியுள்ள புலம்பெயர்ந்தோருக்கு ஒரு வருடம் வரை வதிவிட அனுமதியையும் பணி அனுமதியையும் பெற அனுமதிக்கும்.
இந்த நிலையில், உள்நாட்டு எதிர்க்கட்சிகள் மற்றும் டெஸ்லா நிறுவனரும் பெரும் கோடீஸ்வரருமான எலோன் மஸ்க்கின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த திட்டத்தை ஆதரித்தார்.
மேலும், ஸ்பெயின் எப்போதும் கண்ணியம், சமூகம் மற்றும் நீதி ஆகிய பாதையைத் தெரிவு செய்கிறது என்றும் வாதிட்டுள்ளார். ஆனால் Popular Party தலைவரான Alberto Núñez Feijóo இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இது வீட்டுவசதி நெருக்கடியை உருவாக்கி, நாட்டில் பொது சேவையை சீர்குலைக்கும் என்றார்.

மேலும், வாடகை மற்றும் வீட்டு விலைகள் சாதனை உச்சத்தை எட்டிவரும் வேளையிலும், உழைக்கும் வர்க்கக் குடும்பங்கள் நகரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையிலும் இந்தத் திட்டம் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.
பல ஆயிரம் மக்கள் குடியிருப்பு பற்றாக்குறையால் அவதிப்படும் நிலையில், தற்போது இப்படியான ஒரு திட்டம், கண்டிப்பாக நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும் என்றார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஸ்பெயினில் குறைந்தபட்சம் ஐந்து மாதங்கள் வசித்த, குற்றப் பின்னணி இல்லாத ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரும், அந்த ஆண்டின் இறுதிக்குள் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களும், விரைவுபடுத்தப்பட்ட வதிவிட அனுமதிக்குத் தகுதி பெறுவார்கள்.
இந்த அனுமதி ஓராண்டு செல்லுபடியாகும், ஆனால் நீட்டித்துக் கொள்ளலாம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, சிறப்பு வதிவிட அனுமதி பெற்றவர்கள் ஸ்பெயினின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலோ அல்லது அகதிகளாக இருந்தாலோ, அதற்கு முன்னதாகவே உரிமம் அளிக்கப்படும்.

இதனிடையே, கடந்த வாரம் பார்சிலோனாவின் எய்சாம்பிளே மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே, தங்களுக்குக் குற்றப் பின்னணி இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பதற்காக நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் நாட்டினர் வரிசையில் காத்திருந்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஸ்பெயினின் மக்கள் தொகை 1.5 மில்லியன் அதிகரித்து 48.9 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பில் ஏறக்குறைய முழுமையும் குடியேற்றத்தினாலேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வந்தவர்களில் 70 சதவீதம் பேர் லத்தீன் அமெரிக்க மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |