Omicron வைரஸ் , பீட்டா வைரஸ், டெல்டா வைரஸ் என அனைத்து வைரஸ்களுக்கும் எதிராக செயல்படும் ஒரு அரிய கண்டுபிடிப்பு
எட்டு மணி நேரம் வரை கொரோனாவைத் தடுக்கும் திறன் கொண்ட, மூக்கினுள் தெளிக்கும் வகையிலான ஒரு ஸ்பிரே பின்லாந்து அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைகளைப் போல் இல்லாமல், இந்த ஸ்பிரே Omicron வகை கொரோனா வைரஸுக்கும் எதிராக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், நோயெதிர்ப்புக் குறைபாடு கொண்டவர்கள் மற்றும் எளிதில் கொரோனா தொற்றும் அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த அரிய கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
பின்லாந்திலுள்ள Helsinki பல்கலை அறிவியலாளர்கள் இந்த ஸ்பிரேயைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
கொரோனா வைரஸைப் பொருத்தவரை, அது இனப்பெருக்கம் செய்யும் இடம், அதாவது அது பெருகும் இடம், மூக்குதான். மூக்கில் பெருகி, எண்ணிக்கையில் அதிகரித்து, பின்னர் அது நுரையீரல் வரை பயணித்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அந்த உண்மையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்பிரே, மூக்கினுள் செலுத்தப்படுவதால், கொரோனா வைரஸ் மூக்கினுள் இனப்பெருக்கம் செய்வதே தடுக்கப்பட்டு விடுகிறது. ஆகவே, முதலிலேயே வைரஸ் தடுக்கப்பட்டுவிடுவதால், அது நுரையீரல் வரை சென்று மோசமான நோயை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைகிறது.
கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், இந்த ஸ்பிரே, முதன்முதலில் Wuhanஇல் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், பீட்டா வகை வைரஸ், டெல்டா வகை வைரஸ் மட்டுமின்றி, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Omicron வகை மரபணு மாற்ற வைரஸுக்கும் எதிராக செயல்படுகிறது என்பதுதான்.
குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சையில் இருப்போர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், HIV தொற்றியவர்கள் முதலான நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு கொண்டவர்களுக்கு இந்த ஸ்பிரே பெரும் வரப்பிரசாதமாக அமைய வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், தடுப்பூசியை எப்படியாவது தடுக்க விரும்புவோர் இந்த ஸ்பிரேயை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. காரணம், இந்த ஸ்பிரே ஒரு தடுப்பு மருந்து அல்ல, தடுப்பூசிக்கு மாற்றாக பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டதும் அல்ல. மாறாக, தடுப்பூசியுடன் இணைந்து செயல்படும் ஒரு கூடுதல் பாதுகாப்பு முறைதான் என்கிறார்கள் அதைக் கண்டுபிடித்த அறிவியலாளர்கள்.
ஆனால், ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்த ஸ்பிரே தற்போது ஆய்வகத்தில் விலங்குகள் மீது மட்டும்தான் சோதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மீது இன்னமும் சோதிக்கப்படவில்லை.
ஆக, அது பயன்பாட்டுக்கு வர இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்.