என்னை கடத்த திட்டமிட்டது யார்? மர்ம மரணம் ஒன்று நடந்துள்ள நிலையில் பெலாரஸ் ஒலிம்பிக் வீராங்கனையின் கோரிக்கை
பெலாரஸ் நாட்டின் சார்பில் ஒலிம்பிக்கில் விளையாட வந்த வீராங்கனை கடத்தப்பட இருந்த விடயம் தொடர்பான பிரச்சினை பூதாகரமாக உருவெடுக்கத் துவங்கியுள்ளது.
பெலாரஸ் நாட்டின் சார்பில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் விளையாட இருந்த Krystsina Tsimanouskaya என்னும் தடகள வீராங்கனையை, திடீரென விளையாட்டில் பங்கேற்பதை நிறுத்தும்படி உத்தரவிட்டு பெலாரஸுக்கே கடத்திச் செல்லும் முயற்சியில் சிலர் இறங்கினார்கள்.
அப்போது, சாமர்த்தியமாக ஜப்பான் பொலிசாரின் உதவியை அவர் நாடியதால், அவரைக் கடத்தும் திட்டம் தோல்வியடைந்தது. தற்போது அவர் போலந்து நாட்டில் புகலிடம் கோர இருக்கிறார்.
இந்நிலையில், எதிர்பாராத மர்ம மரணம் ஒன்று நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் அதிபரான Alexander Lukashenkoவை எதிர்ப்பவர்களை அவர் கைது செய்து சித்திரவதை செய்வதுண்டு.
அப்படி அவரை எதிர்ப்பவர்களை பத்திரமாக பெலாரஸை விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு உதவக்கூடியவர், சமூக ஆர்வலரான Vitaly Shishov என்பவர்.
Krystsinaவின் கடத்தல் நாடகம் ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த நிலையில், உக்ரைனில் வாழ்ந்துவந்த Shishov, மர்மமான முறையில் அவரது வீட்டுக்கு சற்று தொலைவிலுள்ள பூங்கா ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் உக்ரைனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் உளவுத்துறையைச் சார்ந்தவர்கள், அகதிகள் என்ற பெயரில் உக்ரைனுக்குள் நுழைந்திருப்பதாக ஏற்கனவே உக்ரைன் அதிகாரிகள் எச்சரித்திருந்தார்கள்.
அத்துடன், Shishov சடலமாக கண்டெடுக்கப்படுவதற்கு முன், தன்னை யாரோ பின் தொடர்வதாக அவரும் தெரிவித்திருந்தார். Shishov உடலில் காயங்கள் காணப்படும் நிலையில், அவர் பெலாரஸ் அரசின் கைக்கூலிகளால் அடித்துக் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து உக்ரைன் பொலிசார் கொலை வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், இந்த பக்கம் Krystsina ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். டோக்கியோவிலிருக்கும் போலந்து நாட்டின் தூதரகத்தில் தங்கியிருக்கும் Krystsina, தடகள விளையாட்டு தலைமை பயிற்சியாளரான Yuri Moisevich மீது தடைகள் விதிக்கவேண்டும் என்றும், நான் ஒலிம்பிக்கில் விளையாடக்கூடாது என்ற முடிவை எடுத்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Alexander Lukashenkoவை எதிர்க்கும் சமூக ஆர்வலர் Shishovஇன் மர்ம மரணம், Krystsina மற்றும் அவரது குடும்பத்துக்கு இருக்கும் ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதை மறுக்க இயலாது.