வெறும் 10 லட்சம் ரூபாய்க்கா நான் சூதாட போறேன்? பார்டிக்கு போனா கூட 2 லட்சம் செலவு செய்வேன்... தடை குறித்து மனம்திறந்த இந்திய வீரர்
கிரிக்கெட் சூதாட்ட பிரச்சினையில் சிக்கி தடை செய்யப்பட்ட இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்த் அது குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.
பின்னர் சூதாட்ட தடை சம்பந்தமாக மேல்முறையீடு செய்திருந்த ஸ்ரீசாந்த் கடந்த ஆண்டு தடை விலக்கு செய்யப்பட்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கேரளா அணிக்காக சையது முஷ்டாக் அலி தொடரிலும் விளையாடினார்.
இந்நிலையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக பேசிய அவர், நான் ஒரு ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் கூட 4 பந்துகளில் 5 ரன்களை மட்டும் தான் விட்டுக் கொடுத்தேன். அந்த ஓவரில் ஒரு நோபால் போடவில்லை. வொயிடு போடவில்லை.
அதேபோன்று ஒரே ஒரு பந்து கூட ஸ்லோவாக போடவில்லை. என்னுடைய காலில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சை செய்தும் நான் 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தான் பந்து வீசினேன். சூதாட்டத்தில் என்னை தொடர்பு படுத்திக்கொள்ள என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை? அதுவும் பத்து லட்ச ரூபாய்க்கு நான் சூதாட்ட பிரச்சனையில் சிக்க போகிறேன்?
ஒரு பார்ட்டிக்கு சென்றால் இரண்டு லட்ச ரூபாய் வரை செலவு செய்பவன் நான். எனவே நான் அது போன்ற ஒரு சூதாட்டத்தில் ஈடுபடவே இல்லை.
பல பேருக்கு நான் உதவி செய்து இருக்கிறேன். நான் சூதாட்ட பிரச்சனையில் சிக்கியது ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளார்.