வெளிநாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர்: அடுத்தடுத்து வெளிவரும் முக்கிய தகவல்கள்
கட்டாரில் இலங்கையர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டார் தலைநகர் தோஹாவில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் பாதுகாப்பு பணியாளராக இலங்கையர் ஒருவர் பணியாற்றி வந்தார். கடந்த புதன்கிழமை மாலை வாகனம் ஒன்றில் ஆண் மற்றும் பெண் அந்த குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது அவர்கள் அடையாள அட்டையை காட்டாததால் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார் பாதுகாப்பு பணியாளர். இதையடுத்து கோபமான அந்த இளைஞர் பாதுகாப்பு பணியாளரை சுட்டு கொன்றுள்ளார்.
இலங்கையருடன் உடனிருந்த மற்றொரு நபரையும் சுட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இலங்கையரை சுட்டு கொன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த துப்பாக்கிக்கு உரிமம் பெறவில்லை என தெரியவந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த குடியிருப்பு வளாகத்தில் இருப்பவர்கள் கூறுகையில், உயிரிழந்த இலங்கையர் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாவார். அவரின் பணி ஒப்பந்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தனது சொந்த நாட்டிற்கு திரும்பவிருந்தார் என கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளூர் நண்பர்கள் தற்போது பணம் திரட்டி வருவதாக தெரியவந்துள்ளது.
தோஹாவில் துப்பாக்கி வன்முறை சம்பந்தப்பட்ட சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.