இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே பயிற்சியாளராக இருந்த அணி அபார வெற்றி! கிண்ணத்தை கைப்பற்றியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
லண்டனில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே பயிற்சியில் சவுத்தன் பிரேவ் அணி ‘தி ஹன்ட்ரட்' கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள 100 பந்துகளை கொண்ட தி ஹன்ட்ரட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் மற்றும் சவுத்தன் பிரேவ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற மொய்ன் அலி தலைமையிலான பர்மிங்காம் பீனிக்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான சவுத்தன் பிரேவ், 100 பந்துகள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் ஸ்டிர்லிங் 61 (36) ஓட்டங்களையும், ரோஸ் வைட்லி 44 (19) ஓட்டங்களையும், அலெக்ஸ் டேவிஸ் 27 (20) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
169 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பர்மிங்காம் பீனிக்ஸ் அணியால் 100 பந்துகள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
அணி சார்பில் அதிகபடியாக லிவிங்ஸ்டன் 46 (19) ஓட்டங்கயைும், மொய்ன் அலி 36 (30) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். இதன் மூலம் 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற சவுத்தன் பிரேவ் அணி முதல் ‘தி ஹன்ட்ரட்' ஆண்களுக்கான கிண்ணத்தை கைப்பற்றியது.
சவுத்தன் பிரேவ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனே என்பது முக்கிய விடயமாகும்.
இதன் காரணமாக இந்த போட்டி முடிவுகள் இலங்கை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.