இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த இடைக்கால குழு - விளையாட்டு அமைச்சர் திட்டம்
இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த நிர்வாகத்தை இடைக்கால குழுவிடம் வழங்க ஆலோசித்து வருவதாக விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
T20 உலககிண்ணத்தில் இலங்கை அணியின் ஏமாற்றம்
2026 T20 உலக கிண்ணத்தை இந்தியா மற்றும் இலங்கை நடத்தி வரும் நிலையில், இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள சனத் ஜெயசூரிய அந்த பதவியில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் (SLC) தலைவர் ஷம்மி சில்வாவின் பதவிக்காலம் மே 2027 வரை உள்ளது.

இந்நிலையில், சில்வா நிர்வாகத்தை ராஜினாமா செய்யக் கோரி SLC தலைமையகம் முன்பு கடந்த வாரம் பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
SLCயை நிர்வகிக்க இடைக்காலக் குழு இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இலங்கை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட்டை மறுசீரமைத்து கட்டியெழுப்ப SLC நிர்வாகத்தை இடைக்காலக் குழுவிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஐசிசி உடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஐசிசி உடனான இந்த பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐசிசியிடமிருந்து மீண்டும் தடை விதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்ள முடியாது என்பதால் ஐசிசியுடன் இணக்கமாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2024 ஆம் ஆண்டில், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அப்போதைய விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்க சில்வாவை பதவி நீக்கம் செய்தபோது, ஐசிசி இலங்கையின் உறுப்பினர் பதவியை இடைநிறுத்தம் செய்தது.
கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறி, 2025 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |