பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம்
பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக பணி புரிந்துவரும் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரின் கணவரும் குழந்தையும் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என உள்துறை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார் அந்தப் பெண்.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவு
இலங்கையரான சச்சிந்தா வர்ணகுலசூரிய (Sachintha Warnakulasuriya, 36), தனது கணவர் இந்திக குமார (Indika Kumara, 36) மற்றும் மகள் ஹெய்லியுடன் (6) ஸ்கொட்லாந்தில் வசித்து வருகிறார்.

சச்சிந்தா, பிரித்தானியாவில் care workerஆக பணியாற்ற அனுமதிக்கும் வகையிலான விசா பெற்றுள்ளார். சச்சிந்தாவின் குடும்பத்தினர் என்னும் முறையில் அவரது கணவரும் மகளும் சட்டப்படி பிரித்தானியாவில் வாழ உரிமை பெற்றுள்ளனர்.
சச்சிந்தா இலங்கையில் ஒரு குழந்தையை இழந்ததைத் தொடர்ந்து, அவரது கர்ப்பம் அதிக ஆபத்து நிறைந்தது என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜூன் 16 ஆம் தேதி உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அவருக்குத் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், சச்சிந்தாவின் கணவரும் முதல் மகளும் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என உள்துறை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளதால், மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் அவர்.
ஏற்கனவே ஒரு குழந்தையை இழந்துள்ள நிலையில், தற்போது பிரசவ நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளதால் என்ன செய்வது என தெரியவில்லை என்று கூறும் சச்சிந்தா, நாங்கள் முறைப்படி பிரித்தானியாவில் வரி செலுத்துகிறோம், அரசின் உதவி எதையும் பெறவில்லை, எங்கள் சேவைகள் மூலம் பிரித்தானியாவுக்கு எங்கள் பங்களிப்பைச் செய்ய முயல்கிறோம் என்கிறார்.
இப்படி துணைவரையும் குழந்தைகளையும் பிரிந்து தனியாக வாழும் நிலை சச்சிந்தாவுக்கு மட்டுமல்ல, இரண்டு மாதக் குழந்தை ஒன்றிற்குக் கூட பிரித்தானிய உள்துறை அலுலகம் நேரடியாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதாவது, அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பாமல், அந்தக் குழந்தைக்கு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், நீங்கள் அளித்த தகவல்களை பரிசீலித்தோம். விதிகளுக்குப் புறம்பாக விடுப்பு வழங்குவதற்குத் தகுதியான, வலுவான அல்லது கருணை அடிப்படையிலான காரணங்களை நீங்கள் முன்வைத்துள்ளீர்கள் என்பதில் எங்களுக்குத் திருப்தி இல்லை. நீங்கள் முன்வைத்துள்ள காரணங்களில் எதையும் விதிவிலக்கானதாகக் கருத முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |