தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு ரூ.433 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு 50 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 433.49 கோடி) இழப்பீடாக வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.433.49 கோடி இழப்பீடு
பார்சல் கட்டும் போது செய்த தவறு காரணமாக டெலிவரி ஊழியர் மீது தேநீர் சிந்தியதால், அவருக்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 433.49 கோடி) இழப்பீடு வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் உள்ள ஸ்டார்பக்ஸ் விற்பனையகத்தில், மைக்கேல் கார்சியா என்ற ஊழியர் தேநீர் விநியோகம் செய்யும் பணி செய்து கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் நடைபெற்ற அன்று தேநீர் விநியோகம் செய்ய சென்ற மைக்கேலின் பார்சல் சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது.
இதனை அறியாத மைக்கேல் அதனை வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்றார். அப்போது, அந்த தேநீர் அவர் மீது சிந்தி இடுப்பின் கீழ் பகுதி, தொடையின் உள்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர் தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தை நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்தார். அவரது வழக்கறிஞரான நிக்கோலஸ் ரோவ்லி தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில், "ஸ்டார்பக்சில் வேலை செய்யும் ஊழியர் அலட்சியமாக சூடான பானங்களில் ஒன்றை பாதுகாக்க தவறிவிட்டார்.
இதனால் அந்த பானம் மைக்கேல் மீது சிந்தியுள்ளது. அவருக்கு பலமுறை தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.
மேலும் அவர், ஐந்து ஆண்டுகளாக தீக்காயங்களால் ஏற்பட்ட சிதைவு, வலி, செயலிழப்பு மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுடன் வாழ்ந்து வந்தார்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தரப்பில், "நீதிமன்றம் அறிவித்த தொகை அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும்" தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |