அவர்களின் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
இந்தியாவின் தற்போதைய மோசமான நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்புத் தலைவர் ஹன்ஸ் கூறும்போது,
கொரோனா புதிய அலை உருவாகும் சூழலில் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது. அதுவும் கொரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்தும்போது மக்கள் கூட்டங்களைத் திரளாகச் சேர அனுமதிக்கக் கூடாது.
அவ்வாறு அனுமதித்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை எங்கு வேண்டுமானலும் ஏற்படலாம். இதை உணர்வது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமின்றி நாளுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
மூன்றாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பலியாகி வருகின்றனர். இதனிடையே, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பெரும்பாலான நாடுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்க மக்கள் சுற்றுலா தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு வரலாம் எனவும் அறிவித்துள்ளன.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 150 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் கொர்ரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.