பிரித்தானிய பிரதமர் பயன்படுத்திய அந்த வார்த்தை: வருத்தம் தெரிவித்தார்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பெருமளவிலான புலம்பெயர்தல் குறித்து விமர்சிப்பதற்காக கூறிய ஒரு வார்த்தைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
வருத்தம் தெரிவித்த பிரதமர்
சென்ற மாதம் ஸ்டார்மர் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் குறித்து உரையாற்றும்போது, ’நம் நாட்டைப்போன்றதொரு பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், நாம் ஒன்றாக முன்னேறிச் செல்லும் நாடாக இல்லாமல், நம் நாடு அந்நியர்களின் தீவாக மாறும் அபாயம் உள்ளது’ என்று கூறியிருந்தார்.
ஸ்டார்மரின் உரைக்கு கடும் விமர்சனம் எழுந்தது. காரணம், இதேபோல 1968ஆம் ஆண்டு, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஏனோக் பவல் என்பவர், புலம்பெயர்தல் குறித்து கடுமையாக விமர்சித்து ஒரு உரை ஆற்றினார்.
அவரது உரையில் இடம்பெற்ற வார்த்தைகளின் கடுமை காரணமாக, அந்த உரை, ’ஏனோக் பவலின் இரத்த ஆறுகள் உரை’ என்றே அழைக்கப்படுகிறது.
ஆக, ஸ்டார்மரின் உரையும் ஏனோக்கின் உரையை ஒத்திருந்ததே அவரது உரை விமர்சனத்துக்குள்ளாக காரணமாக அமைந்தது.
ஆகவே, தான் புலம்பெயர்தல் குறித்து விமர்சிப்பதற்காக பயன்படுத்திய அந்த வார்த்தைகளுக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக ஸ்டார்மர் கூறியுள்ளார்.
தனது வார்த்தைகள் ஏனோக்கின் வார்த்தைகளை ஒத்திருந்தது தனக்கு தெரியாது என்று கூறியுள்ள ஸ்டார்மர், அந்த உரையை தனக்கு எழுதிக்கொடுத்தவர்களுக்கும் அந்த விடயம் தெரியாது என்று கூறியுள்ளார்.
ஆனால், அப்படியானால் பிரதமர் ஒரு டம்மி, தானாக பேசாமல், யாரோ எழுதிக்கொடுப்பதை வாசிப்பவர், நமக்கு ஒரு தலைவர்தான் வேண்டும். யாரோ ஒருவரின் உரைக்கு வாயசைப்பவர் தேவை இல்லை என எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |