புலம்பெயர்தல் தொடர்பில் மோசமாக விமர்சித்த பிரபலம்: மன்னிப்புக் கேட்க பிரதமர் வலியுறுத்தல்
புலம்பெயர்தலுடன் தொடர்புபடுத்தி பிரித்தானியா குறித்து விமர்சித்த பிரபலம் ஒருவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர்தல் தொடர்பில் விமர்சனம்
பிரித்தானிய பிரதமர் புலம்பெயர்தலை சரியான முறையில் கையாளவில்லை என ஏற்கனவே விமர்சனம் இருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப்போல விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார் பிரபலம் ஒருவர்.

அவர், INEOS என்னும் பிரம்மாண்ட பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தை நிறுவியவரும், மான்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து அணியின் இணை உரிமையாளருமான பிரித்தானிய கோடீஸ்வரர் சர் ஜிம் ராட்க்ளிஃப் (Sir Jim Ratcliffe) என்பவர் ஆவார்.
2018ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, அப்போது பிரித்தானியாவிலேயே பணக்காரராக இருந்த சர் ஜிம்முடைய சொத்து மதிப்பு அப்போது 21.05 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.
சமீபத்தில் பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சர் ஜிம், பிரித்தானியா புலம்பெயர்ந்தோரால் காலனித்துவப்படுத்தப்பட்டுள்ளது என்றும், பிரதமர் ஸ்டார்மர், நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக கடினமான நடவடிக்கைகளை எடுக்க இயலாத, மென்மையானவராக உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
அதாவது, பிரித்தானியா புலம்பெயர்ந்தோரால் நிரம்பி வழிவதாகவும், அவர்களால் நாட்டின் பொருளாதாரமும் சமுதாயமும் அழுத்தத்திற்குள்ளாவதாகவும், பிரதமரோ, புலம்பெயர்தல் தொடர்பில் கடினமான நடவடிக்கைகள் எடுக்க இயலாத நிலையில் உள்ளார் என்றும் கூறியுள்ளார் சர் ஜிம். இந்நிலையில், சர் ஜிம் புலம்பெயர்தல் குறித்து தெரிவித்த கருத்துக்கள் காயப்படுத்தக்கூடியவை என்றும் தவறானவை என்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விமர்சித்துள்ளார்.
Offensive and wrong.
— Keir Starmer (@Keir_Starmer) February 11, 2026
Britain is a proud, tolerant and diverse country.
Jim Ratcliffe should apologise.https://t.co/7mSnVV33oo
மேலும், பிரித்தானியா, பெருமை, சகிப்புத்தன்மை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றும் கூறியுள்ள பிரதமர் ஸ்டார்மர், சர் ஜிம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பிரதமர் இல்ல செய்தித்தொடர்பாளரும், சர் ஜிம்மின் கருத்துக்கள், நமது நாட்டைப் பிரிக்க விரும்புவோர் வாய்க்கு, மெல்லுவதற்கு அவல் கிடைத்ததுபோல் அமைந்துவிடும் என்று கூறியுள்ளதுடன், அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சர் ஜிம்முடைய கருத்துக்களுக்கு கட்சி பேதமின்றி பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்டெல்லா க்ரீஸி என்பவர், பிரித்தானியாவுக்கும், ஏன், சர் ஜிம் இணை உரிமையாளராக இருக்கும் அவரது சொந்த கால்பந்து அணிக்கும், புலம்பெயர்ந்தோர் அளித்துள்ள பங்களிப்பை அவர் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை என கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |