பட்டினியால் வாடும் வடகொரிய மக்கள்! அதிபர் கிம் ஜாங் பிறந்தநாளுக்கு போடப்பட்ட ஒரு உத்தரவால் ஏற்பட்ட அதிர்ச்சி
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பிறந்தநாளுக்கு வகைவகையான இனிப்புகள், மிட்டாய்களை வழங்குவதற்கான பணத்தை கொடுக்க பட்டினியால் வாடும் அந்நாட்டு மக்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாட்டில் மாவு மற்றும் சர்க்கரை விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கிம் ஜாங் உன் பிறந்தநாள் ஜனவரி மாதம் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல்வேறு வகையான இனிப்புகள், மிட்டாய்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படவுள்ளது.
அதற்காக அதிக அளவிலான மாவுகள், சர்க்கரைகள் தேவைப்படும் நிலையில் அதற்கான பணத்தை மக்கள் கொடுக்க வேண்டும் என உள்ளூர் அரசாங்கங்கள் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் உணவு பஞ்சம் நிலவும் சூழலில் இந்த விடயங்கள் அரங்கேறுகிறது. இது குறித்து உன்சன் நகரில் வசிக்கும் நபர் ஒருவர் கூறுகையில், இரண்டு நாட்களாக ஒரு கிலோ மாவின் விலை 12,000 wonல் இருந்து 30,000 won ஆக உயர்ந்துள்ளது.
அதே போல சர்க்கரை விலையும் 13000 wonல் இருந்து 25000 wonஆக அதிகரித்துள்ளது. கிம் ஜாங்-உன் பிறந்தநாளுக்கு ஒவ்வொரு மாகாணமும் குழந்தைகளுக்கு பரிசாக மிட்டாய்களை தயாரித்து வழங்க வேண்டும் என்று நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டதுதான் இதற்குக் காரணம் என கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு இனிப்புகளை பிறந்தநாளில் கொடுக்கும் வழக்கம் கிம் ஜாங் உன் தாத்தா கிம் சுங் காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வீட்டில் இருந்தும் இனிப்புகளை தயாரிக்கும் பணிக்காக முட்டையை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற உணவு பற்றாக்குறை நேரத்தில் கிம் ஜாங் பிறந்தநாளை காரணம் காட்டி அதிகாரிகள் தங்களின் பாக்கெட்டுகளைத் காலி செய்வதாக மக்கள் கோபமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.