அவுட்டான ருத்துராஜ்! ஜடேஜாவுக்கு பதிலாக நான் போகிறேன் என கண்ணால் சொன்ன டோனி... ரகசியம் உடைத்த ஸ்டீபன் பிளமிங்
டெல்லிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்ததும் நான் களத்துக்கு போகிறேன் என்று டோனி தன்னிடம் கண்களால் பேசியதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ப்ளே-ஆப் ஆட்டத்தில் மிரட்டலான பேட்டிங் மூலம் வெற்றி பெறச் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் கண்ட டோனி 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார்.
அந்த இடத்தில் ஆல்-ரவுண்டர் ஆன ரவீந்திர ஜடேஜா களமிறங்குவதுதான் வழக்கம். சமீபத்திய போட்டிகளில் ரன் குவிக்கத் தடுமாறிவந்த டோனி பேட்டிங் வரிசையை மாற்றி திடீரென களமிறங்கியது பலருக்கும் ஆச்சரியமளித்தது.
முன்னதாக, 19-வது ஓவரின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அந்த நேரத்தில் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்து நெருக்கடி ஏற்பட்டிருந்த சூழலில், யாரை களமிறக்குவது என விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில், 'நான் போகிறேன்' என்று டோனி தன்னிடம் கண்களால் பேசியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறினார்.
போட்டிக்கு முன்பாக டோனி நெட் பயிற்சியின் போது அதிரடியாக ஆடினார் என்றும் அதனால் அவர் முன்னரே களமிறங்கியதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.