உயிர் உறையும் குளிர்... விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணித்த இளைஞர்: பதறவைக்கும் சம்பவம்
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணித்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில்
அல்ஜீரியா நாட்டில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு பிரான்ஸின் பாரிஸ் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
@getty
இந்த நிலையில் தொழில்நுட்ப சோதனைகளின் போது உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த இளைஞரை மீட்டுள்ளனர். அந்த இளைஞருக்கு வெறும் 20 வயதிருக்கலாம் என்றும், ஏர் அல்ஜீரி விமானமானது அல்ஜீரியாவின் ஓரான் நகரத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தொடர்புடைய இளைஞரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர். அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே மீட்கபட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் சுமார் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும் போது வெப்பநிலை -50 C முதல் -60 C வரையில் சரிவடையலாம் என்றும், அதுபோன்ற மிக மோசமான நிலையை, விமான சக்கரத்தில் ஒளிந்து பயணிக்கும் நபர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பறக்கும் விமானத்தில் இருந்து சடலமாக
1947 முதல் 2020 வரையில் உலகெங்கும் இதுபோன்று 128 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் FAA என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதில் 75 சதவிகித பயணிகள் மரணத்தை தழுவியதாகவே கூறப்படுகிறது.
@getty
2019ல் இதுபோன்று விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணித்த ஒருவர், பறக்கும் விமானத்தில் இருந்து சடலமாக தென்மேற்கு லண்டனில் ஒருவரது வீட்டு தோட்டத்தில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது பாரிஸ் நகர விமான நிலையத்தில் மீட்கப்பட்ட இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரது நிலை தொடர்பில் மேலதிக தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |