இறைச்சி தொழிற்சாலையிலிருந்து வீசிய வித்தியாசமான நாற்றம்... பொலிசார் ரெய்டில் சிக்கியது என்ன தெரியுமா?
பிரித்தானியாவில், Lancashire பகுதியில், இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து மோசமான நாற்றம் வீசியுள்ளது.
அவ்வழியே வந்த பொலிசார் ஒருவர், அந்த நாற்றத்தை உணர்ந்து அந்த தொழிற்சாலையின் கதவைத் தட்டியுள்ளார். யாரும் கதவைத் திறக்காததால், அங்கு குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்களை அழைத்துள்ளார். அப்போதும் யாரும் பதிலளிக்காததால், அவருக்கு சந்தேகம் ஏற்படவே, அதிக பொலிசாரை அவர் அழைக்க, அவர்கள் அங்கு ரெய்டு நடத்தியுள்ளார்கள்.
ரெய்டில், அந்த தொழிற்சாலையில் எக்கச்சக்கமான கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை நடத்துவதாகக் காட்டிக்கொண்டு, சிலர் கஞ்சாவை பிரித்தானியாவுக்குள் கடத்திக் கொண்டு வந்துள்ளார்கள்.
அந்த தொழிற்சாலைக்குள் உறையவைக்கப்பட்ட இறைச்சியும், நன்கு பார்சல் செய்யப்பட்ட கஞ்சா பெட்டிகளும் கிடைத்துள்ளன. அவர்கள், உறையவைத்த இறைச்சி துண்டுகளுக்கு நடுவே கஞ்சா பெட்டிகளை மறைத்து வைத்து இறக்குமதி செய்துள்ளார்கள்.
அந்த தொழிற்சாலைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், தொழிற்சாலைக்குள் கிடைத்த பொருட்கள் ஆகியவற்றை DNA பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிசார், DNA ஆதாரங்கள் முதலான முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில், Badrul Alam (35), Ismail Ahmed (36) மற்றும் Yamin Patel (34) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய Gary McCann (59) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜனவரி மாதம் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
அந்த இறைச்சி தொழிற்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு, 3.25 மில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது!