எல்-நினோ தாக்கம்: 4.9 கோடி மக்கள் பட்டினியில் வாடலாம்- ஐ.நா.
எல்-நினோவின் தாக்கத்தால் உலகில் 4.9 கோடி மக்கள் பசிப் பட்டினியில் வாடலாம் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
4.9 கோடி மக்கள்
உலக உணவு திட்டம் (WFP) வெளியிட்ட புதிய அறிக்கையில், வலுவான எல்-நினோ வானிலை நிகழ்வு காரணமாக, உலகில் அதிகமாக பாதிக்கப்படவுள்ள பல பகுதிகளில் கூடுதலாக 4.9 கோடி மக்கள் பசியின் கோரப்பிடியில் சிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, தற்போது 45 நாடுகளில் 22 சதவீதம் அதிகரிப்புடன் மொத்தம் 274 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் உள்ளது.

மத்திய அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய அமெரிக்காவில் 83 சதவீதம் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் 75 சதவீதம் வரை பசியால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என WFP தெரிவித்துள்ளது.
எல்-நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் இயற்கை நிகழ்வு. இது உலகளாவிய வானிலை மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. ஆப்பிரிக்காவில் வறட்சி, ஆசியாவில் மழை தாமதம், சில பகுதிகளில் வெள்ளம் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.
WFP அதிகாரி ஜீன்-மார்டின் பவுயர் கூறியதாவது:
“இத்தகைய நிகழ்வுகள் கடந்த காலங்களில் பெரிய அளவிலான பசியை தூண்டியுள்ளன. எனவே, முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது அவசியம்” என எச்சரித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிதி உதவிகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக, உணவு பாதுகாப்பு தொடர்பான தரவுகள் சேகரிப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இது எதிர்கால பசி நெருக்கடிகளை அடையாளம் காண சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டது.
WFP, தற்போது 18 நாடுகளில் முன்கூட்டிய நடவடிக்கை திட்டங்களை விரிவுபடுத்தி, 13 லட்சம் மக்களுக்கு பண உதவி மற்றும் பிற ஆதரவுகளை வழங்கி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |