இந்திய அணியின் பிரபல ஆல்ரவுண்டர் வீரர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்டூவர்ட் பின்னி இந்திய அணிக்காக 2014-16ம் ஆண்டுகளுக்கு இடையே 6 டெஸ்ட் போட்டிகள், 14 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 3 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். 1983 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் உறுப்பினர் ராஜர் பின்னியின் மகனான ஸ்டூவர்ட் பின்னிக்கு வயது 37.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 194 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் ஸ்டூவர்ட் பின்னி. ஒருநாள் போட்டிகளில் 230 ரன்களும் 20 விக்கெட்டுகளையும், டி20-யில் 24 ரன்கள் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.
ஸ்டூவர்ட் பின்னியின் மறக்க முடியாத ஒரு பந்து வீச்சு எது என்றால் 2014-ல் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டி ஒன்றில் அனில் கும்ப்ளேயின் சிறந்த பவுலிங் சாதனையை முறியடித்தார்.
4.4 ஓவர்களில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை 58 ரன்களுக்குச் சுருட்டினார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி அறிவித்துள்ளார்.