இதுவரை 550 பேர்கள் கைது... வெளிநாட்டில் தீவிரமாக பரவும் மாணவர்களின் போராட்டம்
இஸ்ரேலுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வலுத்து வரும் நிலையில், Harvard, Columbia, Yale மற்றும் UC Berkeley உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
மாணவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
அமெரிக்காவின் முதன்மையான பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையில், காஸாவில் போருக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் இஸ்ரேலுக்கு முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
தாங்கள் கைதாக தயார் என்றும், ஆனால் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்றே அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் முதன்மையான பல்கலைக்கழகங்களில் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 550 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Harvard, Columbia, Yale மற்றும் UC Berkeley உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் போராட்டங்களால் ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாதவை என குறிப்பிட்டு பல்கலைக்கழக நிர்வாகம் அவற்றை அகற்ற காவல்துறைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக மாணவர்கள் மீது, கலவரக்காரர்கள் போன்று கண்ணீர் குண்டுகள் மற்றும் Tasers-களை பொலிசார் பயன்படுத்தியுள்ளனர். எமோரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் பொலிசாரால் தரையில் வீழ்த்தப்பட்டு கைவிலங்கிடப்பட்ட காணொளி இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.
யூத எதிர்ப்பு என்பதை ஏற்க முடியாது
34,300 பேர் பலியாகியுள்ள காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு தாங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேலுடனான எந்த ஒப்பந்தங்களையும் கைவிட வேண்டும் என்றும் முதலீடுகள் இனி கூடாது என்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது அமெரிக்கா முழுவதும் பல்வேறு பல்கலையில் வியாபித்துள்ளது.
இதனிடையே, அப்பட்டமான யூத எதிர்ப்பு என்பதை ஏற்க முடியாது என்றும், குறிப்பாக கல்லூரி வளாகங்களில் கூடாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ஆனால் மாணவர்களின் கருத்துரிமைக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதாக வெள்ளைமாளிகை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |