அமெரிக்க நாடாளுமன்றம் மீது திடீர் தாக்குதல்: அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் தேசிய கொடி
அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்பு பொலிஸ் அதிகாரிகள் மீது கார் மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த திடீர் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன், இன்னொருவருக்கு காயமேற்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் பொலிசாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு, காயம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அரண் மீது மோதி நிறுத்தப்பட்ட காரில் இருந்து வெளியே வந்த அந்த நபர்,
திரண்ட பொலிசார் மீது கத்தியை வீசி தாக்க முயன்றுள்ளார். இதில் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு காயமேற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, சரணடைய மறுத்த தாக்குதல்தாரியை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால் காயம் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், குறித்த சம்பவத்திற்கு தீவிரவாத தொடர்பு இல்லை என்றே பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற கட்டிடத்தின் வடக்கு பகுதியிலேயே சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த ஜனாதிபதி ஜோ பைடன், இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளை மாளிகையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 6ம் திகதி நடந்த கலவரத்தை அடுத்து நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதி பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும், சமீபத்தில் நீக்கப்பட்டிருந்தது.
தற்போது கார் மூலம் தாக்குதல் நடந்த நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதல்தாரி தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.

