மீண்டும் சூயஸ் கால்வாயின் நடுவில் மாட்டிக்கொண்ட சரக்கு கப்பல்! போக்குவரத்து பாதிப்பு
உலகிலேயே மிக முக்கியமான கால்வாயாக கருதப்படும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் மீண்டும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் 54 கிமீ தூரத்தில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக துறைமுகத்திலிருந்து வெளியே வரவேண்டிய நான்கு கப்பல்கள் வெளியே செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டது.
இதன்காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியதால், சூயஸ் கால்வாய் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய நிலையில், மாட்டிக்கொண்டுள்ள கன்டெயினர் கப்பலை விடுவிக்கும் பணி தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளதாக சூயஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாட்டிக்கொண்டுள்ள கப்பல் தென் அமெரிக்க நாடான பனாமாவை சேர்ந்தது என்றும், 225 மீட்டர் நீளம் மற்றும் 32 மீட்டர் அகலம் கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. மேலும், இது சூடான் தரைமுகத்திற்கு சென்றுகொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டில் சூயஸ் கால்வாய் முடங்குவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த மார்ச் மாதம், எவர்க்ரீன் நிறுவனத்தின் 'எவர்கிவன்' எனும் 400 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பல் ஒன்று தரை தட்டி கால்வாயின் குறுக்கே மாட்டிக்கொண்டது.
பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு கப்பல் பத்திரமாக மீட்கப்பட்டு, போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டது. அனால், இதனால் எகிப்திய நாட்டுக்கு மில்லியன் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது, மேலும் உலகளவில் 6.5 பில்லியன் பவுண்டுகள் அளவிலான வர்த்தகம் தாமதமானது.