இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சையால் மக்கள் ஆதரவை இழந்துவரும் ராஜகுடும்பம்
இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் மோசமான குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் உள்ள தொடர்பு குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து ராஜகுடும்பத்துக்கான மக்கள் ஆதரவு குறைந்துவருகிறது.
சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ
2021ஆம் ஆண்டு, இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக வழக்குத் தொடர்ந்தார் விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் பெண்.

வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்து, அந்தப் பெண்களை அரசியல் பிரபலங்கள் உட்பட தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கிய அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடைய மாளிகைக்கு வந்தபோது ஆண்ட்ரூ தன்னுடன் பல முறை உறவு கொண்டதாகவும், தனக்கு அப்போது 17 வயது மட்டுமே என்றும் விர்ஜினியா கூறிய விடயத்தால் ராஜகுடும்பம் அதிர்ந்தது.

ஆண்ட்ரூ ராஜகுடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். என்றாலும், பணத்தைக் கொடுத்து அதை பெரிய அளவில் வெளியே வரவிடாமல் செய்துவிட்டார்கள். ஆண்ட்ரூ எதுவுமே நடவாததுபோல நடமாடிவந்தார்.
இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை, எப்ஸ்டீன் தொடர்பிலான, எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்களை வெளியிட்டுவருகிறது.
அந்த ஆவணங்கள் எப்ஸ்டீனுக்கும் ஆண்ட்ரூவுக்கும் இடையிலான பல மின்னஞ்சல் பகிர்வுகளையும், புகைப்படங்களையும் வெளியிட, ஆண்ட்ரூ விர்ஜினியாவுடன் மட்டுமல்ல, வேறு பல பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

அதில், வரிசையாக ஐந்து பெண்கள் அமர்ந்திருக்க, அவர்கள் மடியில் ஆண்ட்ரூ படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றும், ஒரு பெண்ணின் அருகே ஆண்ட்ரூ நாலுகாலில் நிற்கும் புகைப்படம் ஒன்றும் இருந்தன.

அத்துடன், எப்ஸ்டீன், ஆண்ட்ரூவுக்காக, பிரித்தானியர் அல்லாத ஒரு பெண்ணை அவரது வீடான ராயல் லாட்ஜுக்கு அனுப்பிவைத்ததும் தெரியவந்துள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூவால் தலைக்குனிவு
கடந்த அக்டோபரில், இங்கிலாந்திலுள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்த மன்னர் சார்லசிடம், ஆண்ட்ரூ தொடர்பில் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார் ஒருவர்.

சமீபத்தில் இங்கிலாந்துக்குச் சென்றிருந்த மன்னர் சார்லஸ், பொதுமக்களை சந்தித்த நிலையில், ரிச்சர்ட் என்னும் நபர் மன்னரைப் பார்த்து, ’உங்கள் சகோதரரை விசாரிக்கக்கூடாது என பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்தீர்களா?’ என சத்தமிட்டார்.
சில ஊடகவியலாளர்களும் ஆண்ட்ரூ தொடர்பில் மன்னரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
சமீபத்தில் உச்சி மாநாடு ஒன்றிற்கு சென்றிருந்த மன்னரின் தம்பியான இளவரசர் எட்வர்டிடமும் ஆண்ட்ரூ தொடர்பில் கேள்வி எழுப்பினார் ஊடகவியலாளர் ஒருவர்.
ஆக, ஆண்ட்ரூவால் ராஜகுடும்பத்துக்கு தலைக்குனிவு தொடர்கிறது.

இந்நிலையில், பிரித்தானியாவுக்கு மன்னராட்சி வேண்டுமா அல்லது பிரித்தானியாவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஆட்சி செய்யவேண்டுமா என 2,100 வயது வந்த பிரித்தானியர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, பிரித்தானியாவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஆட்சி செய்யவேண்டும் என 32 சதவிகிதம் மக்கள் பதிலளித்துள்ளனர்.
இதற்கிடையில், ராஜகுடும்பத்துக்கு மக்களிடையே ஆதரவு சரிந்துள்ளதும் சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
நான்கு மாதங்களுக்கு முன் ராஜகுடும்பத்துக்கு 48 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது 45 சதவிகித மக்கள் மட்டுமே ராஜகுடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |