என்ன ஆச்சு புடினுக்கு? பங்கேற்க இருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பால் எழுந்துள்ள சந்தேகம்...
ரஷ்ய ஜனாதிபதியான புடின் ஆண்டுதோறும் பங்கேற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு என்ன ஆயிற்று என கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் The Direct Line to Vladimir Putin என்றொரு நிகழ்ச்சி நடக்கும்.
அதில் பொதுமக்கள் புடினிடம் என்ன வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கலாம். பல மில்லியன் கேள்விகளில், சுமார் 70 கேள்விகளைத் தேர்வு செய்து, அவற்றிற்கு விலாவாரியாக பதிலளிப்பார் புடின்.
ஆனால், இந்த ஆண்டு அந்த கேள்வி பதில் நிகழ்ச்சி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புடினுக்கு உடல் நலமில்லை, அவருக்கு புற்றுநோய் அல்லது பார்க்கின்சன்ஸ் பிரச்சினை இருக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அதனால்தான் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது.
இன்னொரு பக்கம், எளிதாக வென்றுவிடலாம் என உக்ரைனில் ஆழம் தெரியாமல் காலை விட்டதில் சுமார் 30,000 ரஷ்யப் படைவீரர்கள் கொல்லப்பட்டிருகிறார்கள்.
உக்ரைனை வெல்ல முடியாதது குறித்தும், தங்கள் படைவீரர்களை பலிகொடுத்தது குறித்தும் ரஷ்ய மக்கள் கேள்வி எழுப்பினால் என்ன பதிலளிப்பது என்ற அச்சம் காரணமாகவும் அந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டும் அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அதற்குக் காரணம் கொரோனா பெருந்தொற்று... ஆனால், அந்நிகழ்ச்சி ஜூன் மாதத்திற்கு பதிலாக டிசம்பரில் நடத்தப்பட்டது.
இம்முறையோ, ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி எப்போது நடத்தப்படும் என்று அறிவிக்கப்படாததால், சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. என்ன ஆச்சு புடினுக்கு?