ஈரானால் உயிர்ப்பலி அதிகரிக்கும்... அது மரணப் படுகுழி: ட்ரம்பிற்கு பகிரங்க எச்சரிக்கை
ஈரானுக்குள் தரைப்படையை அனுப்புவது என்பது மரணத்திடம் ஒப்படைப்பது போன்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் படையெடுப்பு முடிவு தொடர்பில் ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மரணப் படுகுழியில்
அமெரிக்க வீரர்களுக்காகத் தங்கள் படைகள் தயாராகக் காத்திருப்பதாகவும், அவர்களைத் தீக்கிரையாக்கி, அவர்களின் பிராந்தியக் கூட்டாளிகளை என்றென்றும் தண்டிக்க இருப்பதாகவும் ஈரானின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விரைவில் தரைவழிப் படையெடுப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக வரும் தகவல்களுக்கு மத்தியில், சுமார் 2,500 அமெரிக்கக் கடற்படையினர் வளைகுடாப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
ஆனால், ராஜதந்திரத் தீர்வுகள் குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிக்கொண்டே, படையெடுப்புக்கு வீரர்களை அனுப்புவது என்பது உலக மக்களை ஏமாற்றும் நவடிக்கை என ஈரானின் நாடாளுமன்ற அவைத்தலைவர் முகமது பாகர் காலிபாஃப் அமெரிக்காவை குற்றஞ்சாட்டினார்.
மேலும், எங்கள் தாக்குதல் தொடரும், எங்கள் ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. எங்கள் உறுதியும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எந்தவொரு சாத்தியமான தரைவழி நடவடிக்கையும் முழு அளவிலான படையெடுப்பாக அமையாது என்றும், அது தொடர் திடீர் தாக்குதல்களை உள்ளடக்கியதாக இருக்கலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பு வாஷிங்டன் போஸ்டிடம் தெரிவித்துள்ளது.
ஆனால் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி நேற்று தெரிவிக்கையில், துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க நிர்வாகம் ஆயுதப் படைகளை மரணப் படுகுழியில் தள்ளி விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீதான இந்தப் படையெடுப்பில் கார்க் தீவைக் கைப்பற்றுவது, ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவது என்பது மட்டுமே முதன்மை இலக்காக இருக்கும் என அமெரிக்க இராணுவத் தலைவர்கள் விவாதித்து முடிவு செய்துள்ளனர்.
ஓரிரு மாதங்கள் ஆகலாம்
அத்துடன், வணிக மற்றும் இராணுவக் கப்பல் போக்குவரத்தை இலக்காகக் கொள்ளக்கூடிய ஆயுதங்களை அழிப்பதற்காகவும் படைகள் நிறுத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முடிக்க ஓரிரு மாதங்கள் ஆகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது ஐந்தாவது வாரத்தில் நுழைந்துள்ள இந்தப் போர், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, உரத் தட்டுப்பாட்டை உண்டாக்கியுள்ளது, மேலும் விமானப் பயணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதுடன், அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலையும் ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது.
இதனிடையே, ஈரான் மீதான தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்க மக்களில் 62 சதவீதம் பேர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெறும் 12 சதவீதம் மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |