துருக்கியை மகிழ்விக்க புகலிடக்கோரிக்கையாளரை நாடுகடத்திய ஸ்வீடன்: வெளிவரும் பின்னணி
துருக்கியை சேர்ந்த குர்து இனத்தவர் ஒருவரை புகலிடக் கோரிக்கையை நிராகரித்து வெளியேற்றியுள்ளது ஸ்வீடன். குறித்த நபருக்கு குர்து போராளிக் குழுவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தே ஸ்வீடன் நடவடிக்கை எடுத்துள்ளது.
துருக்கியின் ஒப்புதலும் தேவை
நேட்டோ அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்தை பெற துருக்கியின் ஒப்புதலும் தேவை என்பதால் ஸ்வீடன் அந்த நபரை வெளியேற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2015ல் இருந்தே மஹ்முத் தாட் என்பவர் ஸ்வீடன் அரசிடம் புகலிடம் கோரி வந்துள்ளார்.
@file
குர்து போராளிக் குழுவினருடன் தொடர்பு இருப்பதாக கூறி, துருக்கி நிர்வாகம் இவருக்கு 6 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு இவரது இறுதி புகலிடக் கோரிக்கையும் ஸ்வீடன் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால், மஹ்முத் தாட் வெளியேற்றப்பட்டதில் ஸ்வீடன் அரசாங்கத்திற்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் வெளியேற்றப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் எனவும், இது தனியொருவரின் விவகாரம் எனவும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மஹ்முத் தாட் கைது செய்யப்பட்டு இஸ்தான்புல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கருத்தில் கொண்டு ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய மே மாதம் விண்ணப்பித்துள்ளது.
போராளிக் குழுக்களுக்கு அடைக்கலம்
ஆனால் இதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இரு நாடுகளும் தடை செய்யப்பட்ட குர்து போராளிக் குழு உறுப்பினர்களுக்கு அடைக்கலம் அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டியது.
தற்போது துருக்கியில் தேடப்பட்டுவந்த நபரை வெளியேற்றிய நிலையில், நேட்டோ அமைப்பில் இணையும் தகுதியை இரு நாடுகளும் விரைந்து பெற்றுவருவதாக துருக்கி பாராட்டியுள்ளது.
போராளிக் குழுக்களுக்கு அடைக்கலம் அளிக்கவில்லை என மறுத்துள்ள ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள், துருக்கியுடன் இணைந்து செயல்பட தயார் என உறுதி அளித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் இணைய உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், துருக்கி மட்டுமே இரு நாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.