புலம்பெயர் மக்களுக்கு சிக்கல்... விவாதத்திற்குரிய சட்டமியற்றிய ஐரோப்பிய நாடொன்று
மோசமான நடத்தையின் அடிப்படையில் புலம்பெயர் மக்களின் வதிவிட உரிமைகளை ரத்து செய்ய அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ஸ்வீடன் நாடாளுமன்றம் திங்களன்று நிறைவேற்றியுள்ளது.
கடுமையாக்கும் நடவடிக்கை
கடன் தொகையை செலுத்தாமல் இருப்பது, முறையாக அறிவிக்கப்படாத வேலை அல்லது தீவிரவாத அமைப்புகளுடனான தொடர்புகள் போன்ற காரணங்களை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வதிவிட அனுமதிகள் மட்டுமின்றி, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகளையும் விசாரணைக்கு உட்படுத்தும் வகையிலான இந்தச் சட்டம், செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வலதுசாரி அரசாங்கமும் அதன் ஆதரவுக் கட்சியான தேசியவாத 'ஸ்வீடன் டெமாக்ராட்ஸ்' கட்சியும் இணைந்து குடியேற்ற விதிகளைக் கடுமையாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
இந்த நிலையில், குற்றச் செயலாகக் கருதப்படாத நடத்தைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்பதால், இச்சட்டம் தன்னிச்சையானது என்று எதிர்க்கட்சிகளும் மனித உரிமை ஆர்வலர் குழுக்களும் விமர்சித்துள்ளன.
இதனிடையே, ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த சிவில் ரைட்ஸ் டிஃபென்டர்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நன்னடத்தைச் சட்டமானது எந்தெந்தச் செயல்கள் அல்லது கருத்து வெளிப்பாடுகள் தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையை மக்களிடையே ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்வீடன் அரசாங்கத்தின் இந்த முடிவானது சட்டத்தின் ஆட்சியையும், சட்டத்தின் முன் சமத்துவம் எனும் கோட்பாட்டையும் பலவீனப்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.
தங்கள் நாட்டில் இடமில்லை
புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகவும் குற்றச் செயல்களைக் கடுமையாக ஒடுக்குவதாகவும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் 2022-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அரசாங்கம்,
தவறாக நடந்துகொள்பவர்களுக்கோ அல்லது குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கோ தங்கள் நாட்டில் இடமில்லை என்று கூறியுள்ளது.

எந்த வகையான நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று சட்டம் குறிப்பாக வரையறுக்கவில்லை; இருப்பினும், செலுத்தப்படாத கடன்கள், வரிகளைச் செலுத்தாதிருத்தல், குற்றச் செயல்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடனான தொடர்புகள் ஆகியவற்றை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
குடிவரவு முகமையானது அனுமதிகளை மறுஆய்வு செய்யும் பொறுப்பைக் கொண்டுள்ளது, மேலும் அந்த முடிவுகளைக் குடிவரவு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |