இலங்கையில் சுவிஸ் சுற்றுலா பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி: பொலிஸார் எடுத்த துரித நடவடிக்கை
இலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டவர் தனது ஐபோனை பேருந்தில் தவற விட்ட நிலையில் 10 நிமிடத்தில் அதை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஐபோனை தவறவிட்ட சுவிஸ் நாட்டவர்
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஜியான் முல்லர், இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளார்.
அப்போது கண்டி நகரில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற பேருந்தில் முல்லர் பயணித்த நிலையில் மாலை 6.30 மணியளவில் தம்புள்ளை பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.

பேருந்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திற்கு பிறகே தன்னுடைய ஐபோன்(iPhone) காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அருகில் தம்புள்ளை நகரில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்டை முல்லர் உதவிக்காக நாடியுள்ளார்.
முல்லரின் பயணச்சீட்டு விவரங்களை வைத்து சம்பந்தப்பட்ட பேருந்தின் உரிமையாளரை தொடர்பு கொண்ட பொலிஸ் சார்ஜன்ட், பின்னர் அந்த பேருந்தின் CCTV கேமராக்களைச் சோதிக்குமாறு அறிவுறுத்தினார்.
நல்ல வேளையாக முல்லரின் ஐபோன் அதே பேருந்தில் இருந்திருக்கிறது, மேலும் ஓட்டுநர் அந்த ஐபோனை தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறோம் என பொலிஸ் சார்ஜன்ட்டிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கண்ணீர் விட்ட சுவிஸ் நாட்டவர்
காவல் நிலையத்தில் தன்னுடைய ஐபோனை திரும்ப பெற்ற சுவிஸ் நாட்டு சுற்றுலா பயணி முல்லர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டுள்ளார்.
தன்னுடைய கற்றல் பணி தொடர்பான முக்கியமான கோப்புகள் இதில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விரைவான உதவி செய்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் தம்புள்ளை தலைமையக பொலிஸார் ஆகியோருக்கு முல்லர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
மேலும் அதிகாரிகளுக்கு பரிசாக முல்லர் பணம் வழங்கிய போது அதனை பொலிஸார் மறுத்ததுடன், இது எங்களுடைய கடமை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |