கழுத்தின் மேல் கத்தி தொங்குகிறது: எச்சரிக்கும் ஹர்பஜன் சிங்
இந்திய அணியில் மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் இக்கட்டான சூழலிலும் நன்றாக விளையாடி வருவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் 2வது டெஸ்டில் சிறப்பாக விளையாடினர். திறமை காரணமாகவே அணியில் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அந்த டெஸ்டில் ஹனுமா விஹாரியும் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடினார்.
இந்த நிலையில், மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டில் நடந்த ஒரே நல்ல விடயம் ரஹானே ஸ்கோர் செய்ததுதான்.
ரஹானே அரைசதம் அடித்துள்ளதால் கேப்டவுன் டெஸ்ட்டில் மீண்டும் வாய்ப்பு பெறுவார். கோஹ்லி அணிக்கு திரும்புவதால் ரஹானே நீக்கப்பட மாட்டார். ரஹானே பெரிய அளவில் ஓட்டங்கள் சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் அரைசதங்களை சதங்களாக மாற்ற வேண்டும்.
மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாராவின் கழுத்து மீது கத்தி தொங்குகிறது. அப்படிப்பட்ட சூழலிலும் இருவரும் நன்றாக விளையாடி உள்ளனர் என தெரிவித்துள்ளார் ஹர்பஜன்.