டி-20 உலகக் கோப்பையில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி எந்த திகதியில் ..எங்கே நடக்கவிருக்கிறது? கசிந்த முக்கிய தகவல்
ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடரில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி நடக்கவிருக்கும் இடம் மற்றும திகதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 24ம் திகதி துபாயில் நடைபெறவுள்ளதாக நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி ANI தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிசிசிஐ நடத்தும் 2021 ஆண்களுக்கான டி-20 உலகக் கோப்பை தொடருக்கான குழுக்களை அறிவித்தது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், ‘சூப்பர் 12’ சுற்றில் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி நிலவரப்படி அணி தரவரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு அணிகள் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
குரூப் 1-ல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தகுதி சுற்றில் தகுதிப்பெறும் இரண்டு அணிகள் இணையும்.
குரூப் 2-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தகுதிப்பெறும் இரண்டு அணிகள் இணையும்.
ஒரே பிரிவில் இந்திய , பாகிஸ்தான் இடம் பெற்றிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பரம எதிரிகளான இரண்டு அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மீதமுள்ள நான்கு இடங்களுக்கு தகுதி சுற்று நடைபெற உள்ளது, இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தகுதி சுற்றில் ‘குரூப் ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா இடம்பெற்றுள்ளன.
‘குரூப் பி’ பிரிவில் வங்க தேசம், ஸ்காட்லாந்து, , ஓமன் மற்றும் பப்புவா நியூகினி இடம்பெற்றுள்ளன.
இரண்டு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், டி-20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 12’ சுற்றில் விளையாட தகுதி பெறும்.