இது படையெடுப்புக்கான ஒத்திகை... திருப்பி அடிக்கத் தொடங்கிய தைவான்: சீனாவுக்கு அருகே ஆட்டம் ஆரம்பம்
*தைவான் தீவை சுற்றி சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்ட நிலையில் தற்போது தைவானும் துவங்கியுள்ளதால் பிராந்தியத்தில் பதட்டம்
*தைவான் மீது படையெடுக்கும் ஒத்திகையே சீனா சமீபத்தில் முன்னெடுத்துள்ளது - வெளிவிவகார அமைச்சர் ஜோசப் வூ
தைவான் கடற்பரப்புக்கு அருகாமையிலேயே போர் ஒத்திகையை முன்னெடுத்துவரும் சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் தைவானும் ஒத்திகையை தொடங்கியுள்ளது.
தைவான் தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் பீரங்கி பயிற்சியை செவ்வாயன்று முன்னெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தைவான் தீவை சுற்றிவளைத்து சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தைவானும் துவங்கியுள்ளதால் பிராந்தியத்தில் பதட்டம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
சீனா இதுவரை முன்னெடுத்துள்ளதில் மிகப்பெரிய போர் ஒத்திகையை கடந்த வாரம் முன்னெடுத்தது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தைவான் சென்றதை அடுத்தே குறித்த போர் ஒத்திகையை சீனா முன்னெடுத்தது.
@AFP
சீனாவின் தொடர்ச்சியான படையெடுப்பு அச்சுறுத்தலின் மத்தியில் தைவான் நாட்களை கடத்தி வருகிறது. தைவானை தங்கள் பிரதேசத்தின் ஒருபகுதியாகவே சீனா கருதி வருகிறது. மட்டுமின்றி, தேவைப்பட்டால் பலவந்தமாக ஒரு நாள் கைப்பற்றவும் சீனா திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில், தைவான் மீது படையெடுப்பதற்கு சீனா காலக்கெடு எதுவும் வைத்திருக்கவில்லை எனவும், அந்த அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதாகவும் தைவானின் வெளிவிவகார அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்துள்ளார்.
@Reuters
தைவான் மீது படையெடுக்கும் ஒத்திகையே சீனா சமீபத்தில் முன்னெடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெருமளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒத்திகை, ஏவுகணை வீச்சு, அத்துடன் இணையவழி தாக்குதல், தவறான தகவல் பரப்புதல், மட்டுமின்றி பொருளாதார சிக்கலை ஏற்படுத்துதல் என தைவானை மொத்தமாக முடக்க சீனா திட்டமிட்டதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், போர் ஒத்திகையை இனி சீனா பல கட்டமாக தொடரும் எனவும், அதனால் தைவானை தொடர் அச்சுறுத்தலில் வைத்திருக்க முயற்சிக்கும் என்றார்.
மட்டுமின்றி இந்த இக்கட்டான சூழலில் ஆதரவளித்த மேற்கத்திய நாடுகளுக்கு நன்றி தெரிவித்த வூ, பெலோசியின் வருகை எதேச்சதிகாரத்தின் மிரட்டலுக்கு ஜனநாயகம் அடிபணியாது என்ற தெளிவான செய்தியையும் உலகிற்கு அறிவித்திருக்கிறது என்றார்.
@AP