சீனாவின் வெறித்தனமான போர் ஒத்திகை: கப்பற்படையுடன் களத்தில் குதித்த தைவான்
தைவானை மிரட்டும் வகையில் சுற்றிவளைத்து போர் ஒத்திகையை சீனா முன்னெடுத்துவரும் நிலையில், பதிலுக்கு கப்பற்படையை தைவான் களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று திருப்பிய பின்னர், அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தைவானை சுற்றிவளைத்து போர் ஒத்திகையை துவங்கியுள்ளது சீனா.
சீனாவின் இந்த நடவடிக்கை ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில், சீனக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் வெள்ளிக்கிழமை காலை தைவான் ஜலசந்தியின் முக்கிய கோட்டைக் கடந்தன என்று அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளன எனவும் தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், சீனாவின் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், விமானம் மற்றும் கப்பல்களை களமிறக்கியுள்ளதுடன் நிலம் சார்ந்த ஏவுகணை அமைப்புகளையும் தைவான் நிலைநிறுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று திரும்பிய பின்னர், தைவான் எல்லையில் இருந்து 16 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் நேற்று பிரம்மாண்ட போர் ஒத்திகையை நடத்தியது.
அதிநவீன பாலிஸ்டிக், ஹைபர்சானிக் வகைகளைச் சேர்ந்த 11 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. மட்டுமின்றி 7ம் திகதி வரையில் தீவிர போர் ஒத்திகையை நடத்துவோம் என்றும் சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
தைவானின் 6 எல்லைப் பகுதிகளையும் சீனாவின் முப்படைகளும் சுற்றி வளைத்துள்ளன. சீன போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே சீனாவின் போர் ஒத்திகையால் தைவானில் நேற்று 50 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், தைவான் தொடர்பில் பெருமையாக பேசிய நான்சி பெலோசி,
அமெரிக்கா எப்போதும் உடனிருக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார். மேலும், ஆசிய நாடுகளில் மேற்கொண்ட பயணமானது, பிராந்திய அரசியல் சூழல்களை மாற்றுவதற்காக அல்ல எனவும் நான்சி பெலோசி தெளிவுபடுத்தியுள்ளார்.