தைவான் நிலநடுக்கம்: இந்தியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள கவலையை ஏற்படுத்தும் செய்தி
25 ஆண்டுகளில் இல்லாத அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று தைவானை உலுக்கிய நிலையில், தைவானில் வாழ்ந்துவந்த இந்தியர்கள் இரண்டு பேர் மாயமாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பாரிய நிலநடுக்கம்
நேற்று, புதன்கிழமை, காலை 7.58 மணிக்கு, தைவான் நாட்டில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில், அது 7.4ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல சிறிய அதிர்வுகள் ஏற்பட்டதுடன், நிலநடுக்கத்தால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
வீடுகள் அஸ்திபாரத்திலிருந்து பெயர்ந்து சரிந்து விழ, பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்புப் பணிகள் துவக்கப்பட்ட நிலையில், 9 பேர் உயிரிழந்ததாகவும், 1,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தைவானில் வாழும் இந்தியர்கள் நிலை
தைவான் நாட்டில், 3,000 மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலையில், நிலநடுக்கம் உருவான இடத்துக்கு அருகிலுள்ள Taroko Gorge என்னும் பள்ளத்தாக்கு பகுதியில் இரண்டு இந்தியர்கள், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மாயமாகியுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவர்களைத் தவிர்த்து இந்தியர்கள் வேறு யாரும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை.
ஒரு அரிய நெகிழவைக்கும் நிகழ்வு
இதற்கிடையில், இந்திய பிரதமர் மோடி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தைவான் நாட்டவர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தி ஒன்றை எக்ஸில் வெளியிட்டுள்ளார்.
Deeply saddened by the loss of lives due to earthquakes in Taiwan today. Our heartfelt condolences to the bereaved families and wishes for a speedy recovery to the injured. We stand in solidarity with the resilient people of Taiwan as they endure the aftermath and recover from…
— Narendra Modi (@narendramodi) April 3, 2024
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதை அறிந்து அழ்ந்த துயரமடைந்தேன். இழப்பை சந்தித்த குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துகிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உடனடியாக, தைவானின் ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரின் செய்திக்கு பதிலளித்துள்ளார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், தைவான் தொடர்பில் இந்திய தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பது அபூர்வமான செயலாகும்.
ஆகவே, இந்திய பிரதமரின் செய்திக்கு உடனடியாக பதிலளித்துள்ள தைவானின் ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும், அவரது ஆறுதல் செய்திக்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், இப்படிப்பட்ட கடினமான சூழலில் பிரதமர் மோடியின் ஆறுதலளிக்கும் செய்தி தைவான் மக்களுக்கு பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |