புதிய ஆப்கானிஸ்தான் அரசு: பதவியேற்பு விழாவை ரத்து செய்த தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசுக்கான பதவியேற்பு விழாவினை தாலிபான்கள் திடீரென்று ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் இருந்து செயல்படும் முக்கிய செய்தி நிறுவனமே குறித்த தகவலை முதன்முறையாக வெளியிட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடியில் நாடு இருக்கையில் தேவையற்ற பண விரயம் வேண்டாம் என முடிவுக்கு வந்ததாலையே தாலிபான்கள் புதிய அரசின் பதவியேற்பு விழாவை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், உண்மையில் அமெரிக்க இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதன் 20ம் ஆண்டு நினைவு நாளில் தாலிபான்களின் புதிய அரசு பதவியேற்பு விழா முன்னெடுக்கப்பட முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த ரஷ்யா, அவ்வாறு ஒரு திட்டம் தாலிபான்களுக்கு இருந்தால், கண்டிப்பாக பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே, பதவியேற்பு விழாவினை தாலிபான்கள் ரத்து செய்துவிட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா, சீனா, கட்டார், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளை பதவியேற்பு விழாவில் பங்கேற்க தாலிபான்கள் அழைப்பு விடுத்திருந்ததுடன், அந்த நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.
இதனிடையே, செப்டம்பர் 11ம் திகதி பதவியேற்பு விழாவை முன்னெடுக்கும் முடிவை தாலிபான்கள் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என கட்டாரிடம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் அளித்து வந்தது.
ஆனால் பதவியேற்பு விழா தொடர்பான முடிவை பல நாட்களுக்கு முன்னரே எடுத்திருந்ததாக ஆப்கன் அரசின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார்.
தற்போது பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டிருந்தாலும், தாலிபான் அரசு தங்கள் பணிகளை துவங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.