அந்த குடியிருப்புகள் எங்களுக்கு... 3,000 குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திய தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தங்கள் போராளிகளை தங்க வைப்பதற்காக தாலிபான்கள் 3,000 குடும்பங்களை அவர்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேறச் சொன்ன விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்தஹாரில் அமைந்துள்ள ராணுவ குடியிருப்பு வளாகத்தில் உள்ள 3,000 குடும்பங்களையே தாலிபான்கள் 3 நாட்களில் வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.
இதில் கொதித்துப்போன அந்த குடும்பங்கள் கந்தஹார் ஆளுநர் மாளிகைக்கு முன்பு குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான குடும்பங்கள் அந்த ராணுவ குடியிருப்பு வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
தாலிபான்களின் அடாவடித்தனத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். கந்தஹார் ராணுவ குடியிருப்பு வளாகத்தை பொறுத்தமட்டில், முன்னாள் ஆப்கன் ராணுவத்தினர், பாதுகாப்பு வீரர்களின் குடும்பத்தினரே வசித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தாலிபான்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. தாலிபான்கள் கைப்பற்றிய பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியிலும், இதேப்போன்ற வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றிய பின்னர், அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், இறுதியில் கலவரமாகவே முடிந்துள்ளது.
ஆனால் கந்தஹார் விவகாரத்தில் தாலிபான்கள் வன்முறையை முன்னெடுக்கவில்லை என்ற தகவலே வெளியாகியுள்ளது. இதனிடையே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் முன் அனுமதி பெற வேண்டும் என தாலிபான்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.