உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களில் தாலிபான் தலைவர்: வெளியான கருத்துக்கணிப்பு
டைம் இதழ் முன்னெடுத்த 2021ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் பட்டியலி்ல் தாலிபான் தலைவர் முல்லா பராதரும் இடம் பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் அமைய உள்ள இடைக்கால அரசில் துணைப் பிரதமராகவும் முல்லா பராதர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தையிலும் தாலிபான் தலைவர் முல்லா பராதர் ஈடுபட்டிருந்தார். தாலிபான்களில் மிகவும் அமைதியானவர், ரகசியமானவர், வெளியுலகிற்கு அதிகமாக வராதவர் என்று பெயரெடுத்தவர் முல்லா பராதர்.
மட்டுமின்றி, தாலிபான்களின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் அனைத்திற்கும் முல்லா பராதரின் நடவடிக்கைகளே காரணம் என கூறப்படுகிறது. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் ஆப்கனுக்கான மறுசீரமைப்புக் குழுவின் சிறப்புப் பிரதிநிதி ஜல்மே கலிலாஜ்துடன் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவரும் முல்லா பராதர்தான்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியபின், அங்குள்ள நிர்வாகிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தை முன்னெடுத்ததும் பராதர்தான். மட்டுமின்றி, முந்தைய அரசில் இடம் பெற்றிருந்த நிர்வாகிகளுக்கு மன்னிப்பு அளிப்பது, காபூலை ரத்தக்களறியாக்காமல் கைப்பற்றியது, அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் தொடர்பு ஏற்படுத்தும் முடிவு அனைத்தும் முல்லா பராதர் தலைமையில் எடுக்கப்பட்டதாகும் என டைம் இதழ் தெரிவித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் முல்லா பராதரை பாகிஸ்தானில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அதன்பின் 2018ம் ஆண்டு முல்லா பராதர் விடுவிக்கப்பட்டார்.
தாலிபான் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான முல்லா பராதர் அமெரிக்காவுடன் நடத்திய அமைதிப் பேச்சில் முக்கிய பங்கு வகித்தார் ஆனால், அவருக்கு தற்போதைய அரசில் துணைப் பிரதமர் பதவிதான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.