தாக்குதலில் இறந்தவர்களின் இறுதிச்சடங்கு ஒருபக்கம்! அது நடக்கும்போதே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்னர் தாலிபான் தலைவர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் முதல் முறையாக சந்திப்பு நடத்தியுள்ளனர்.
கட்டாரில் தான் இந்த பேச்சுவார்த்தையானது நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதோடு தாலிபான் பிரதிநிதிகள் கட்டார் அமைச்சர் உள்ளிட்டவர்களையும் சந்தித்து பேசினர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் நகரில் இருக்கும் ஒரு மசூதியில் வெள்ளியன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலையடுத்தே இந்த சந்திப்பு நடந்துள்ளது.
பெண்களின் உரிமைகளை மதிப்பது, ஆப்கானிஸ்தானில் அனைத்து இனத்தையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பது, மனிதாபிமான உதவிகள் வழங்கும் அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் இயங்க அனுமதிப்பது உள்ளிட்டவற்றை தாலிபான்களிடம் வலியுறுத்த இந்தப் பேச்சுவார்த்தையை அமெரிக்க அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்று இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
கட்டார் தலைநகர் தோஹாவில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.