ஆப்கானில் 24 மணிநேரத்தில் 2 முக்கிய தலைநகரங்களை கைப்பற்றிய தலிபான்கள்
கடந்த 24 மணிநேரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் இரண்டு முக்கிய மாகாணங்களின் தலைநகரை கைப்பற்றிவிட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்துக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையிலான உள்நாட்டு போர் கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து வருகிறது.
தலிபான்களுக்கு எதிரான இந்த போரில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பெரும் பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து அங்கு நிலைமை மோசமாகி வருகிறது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் சரிபாதி பகுதிகள் தலிபான்களின் வசம் உள்ள நிலையில், ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றும் நோக்கில் தலிபான்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சர்வதேச படைகளின் வெளியேற்றம் காரணமாக சற்று பலவீனம் அடைந்துள்ள ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் அரசு படைகள் வசம் உள்ள முக்கிய நகரங்களை தலிபான்கள் விரைவாக கைப்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், 24 மணிநேரங்களில் இரண்டு மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
அந்த நாட்டின் புகழ்பெற்ற அரசு ஆதரவு ஆயுதக் குழுத் தலைவா் அப்துல் ரஷீத் தோஸ்துமின் ஆதிக்கம் நிறைந்த ஜாவஸ்ஜன் (Jowzjan) மாகாணத் தலைநகா் ஷேபா்கான் (Sheberghan) தலிபான்கள் வசம் நேற்று வந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் தலிபான்கள் கைப்பற்றியுள்ள இரண்டாவது ஆப்கன் நகரம் இதுவாகும். முன்னதாக, நிம்ரோஸ் (Nimruz) மாகாணத் தலைநகா் ஸராஞ் (Zaranj) தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வெள்ளிக்கிழமை வந்தது குறிப்பிடத்தக்கது.