தாலிபான்கள் கிரிக்கெட் விளையாட்டை தொந்தரவு செய்வார்களா? ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் முக்கிய தகவல்
தலிபான்களுக்கு கிரிக்கெட் மீது எந்தப் பிரச்னையும் இல்லை என நினைப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஹமீத் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாடு மீண்டும் தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் கைகளில் சென்றுள்ளது. மேலும் அந்நாட்டில் இருக்கும் மிக முக்கியமான கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.
ஆப்கான் நாட்டில் நிலை குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ரஷீத் கானும், முகமது நபியும் தங்களது கவலைகளை தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக பேசிய ஆப்கான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஹமீத் ஷின்வாரி, பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரிலும், டி20 உலகக் கோப்பை போட்டியிலும் நிச்சயம் ஆப்கான் அணி பங்கேற்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
நாங்கள் பிசிசிஐ மற்றும் ஐசிசியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். தாலிபான்களுக்கு கிரிக்கெட் மீது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே நினைக்கிறேன்.
முன்பு அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கூட கிரிக்கெட்டை அவர்கள் தொந்தரவு செய்யவில்லை. கிரிக்கெட் விளையாடக் கூடாது என்றோ அவர்களால் விளையாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்ட சம்பவங்கள் முன்னதாக கூட நடந்தது இல்லை என கூறியுள்ளார்.