தாலிபான் தலைவர்களுக்குள்ளேயே சண்டை ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டு கொண்டார்களா? நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்
பஞ்ச்ஷீர் விவகாரத்தில் தாலிபான் தலைவர்களுக்குள்ளேயே உட்பூசல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அதை அவர்கள் மறுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி தாலிபான்கள் தங்கள் கட்டுபாட்டுக்குள் முழுமையாக கொண்டு வந்துவிட்டனர்.
இந்நிலையில் தான் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் எதிர்ப்புக் குழுவினரை சமாளிப்பதில் தாலிபான்கள் கவனம் திரும்பியது. இந்த விவகாரத்தில் தாலிபான் தலைவர்களுக்குள்ளேயே உட்பூசல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அனஸ் ஹக்கானி தரப்பினருக்கும் பரதார் தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
மேலும் இந்த சண்டையில் முல்லா அப்துல் கனி பரதார் சுடப்பட்டார். அவர் காயங்களுடன் பாகிஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பரபரப்புத் தகவல் வெளியானது. ஆனால் இத்தகவலை பரதார் ஓர் ஆடியோ மெசேஜ் மூலம் திட்டவட்டமாக மறுத்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று, அனஸ் ஹக்கானியும் சமூகவலைதளத்தில் ஒரு தகவலைப் பகிர்ந்தார். அதில், இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் கொள்கை என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்துள்ளது. நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.
நாட்டில் வளத்தை உறுதி செய்யவும், அமைதியை நிலைநாட்டவும் முனைப்புடன் இருக்கிறோம் என்றார்.
ஆனால், முல்லா ஒமர் போன்ற ஒரு ஸ்திரமான தலைவர் இல்லாமல் தலிபான்களை தற்போதைய சூழலில் ஒருங்கிணைப்பது மிகமிகக் கடினம் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.